செவ்வாய், 27 செப்டம்பர், 2022

கல்லறை எண்: 14 - சும்மா வரவில்லை கிறிஸ்தவம்

C.S.John என்று அழைக்கப்படும் Christoph Samuel John 1747, ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவர்.  இவரது அப்பா Julius Gerhard ஒரு குருவானவர்.  தாயார் பெயர் Catharina Dorothea Pyrläus. ஜான் ஹலே  பல்கலைக்கழகத்தில் குருத்துவக் கல்வி பெற்றார். 1769 ஆம் ஆண்டு கோபன்கேஹனில் குருத்துவ அபிஷேகம் பெற்று தரங்கம்பாடி மிஷனுக்கு அனுப்பப்பட்டார். 16 , மார்ச் ,  1771 இல் இந்தியா நோக்கி புறப்பட்ட இவரோடு Wilhelm Jacobus Müller என்ற உடன் ஊழியரும் பயணமானார். 



தரங்கம்பாடி பகுதியில் கல்வி பரப்புதலே இவரது பிரதான நோக்கமாக இருந்தது. ஐரோப்பியர்களுக்கும், இந்தியர்களுக்கும் பள்ளிகளை நிறுவினார். டென்மார்க்கிற்கும், இங்கிலாந்திற்கும் இருந்த மோதல் காரணமாக கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தான் இவரால் பள்ளிகளை நடத்த முடிந்தது. இந்தியா வந்த முதல் ஆறு ஆண்டுகள் மிகக் கடுமையான வறுமையுடன் போராடினார். அதன் பின் செராம்பூரில் கடைப்பிடிக்கப்பட்ட முறைப்படி ஐரோப்பிய பள்ளிகளை கட்டண அடிப்படையில் நடத்தி அந்த வருமானத்தில் தமிழ் பள்ளிகளை நடத்தும் உத்தியை கையாண்டார். நிதி நெருக்கடியினை சமாளிக்க சுதேச ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தினார். கல்வி மீதான இவரது அதீத ஈடுபாடு காரணமாக பணித்தளத்தில் இருந்த பலருக்கு இவருடன் கருத்து வேறுபாடு இருந்தது. 


 அருட்திரு. ஜான் அவர்களுக்கு ஜெர்மானிய மொழி தவிர ஆங்கிலம், தமிழ் மற்றும் போர்த்துகீசிய மொழிகள் நன்கு தெரியும். தரங்கம்பாடியில் வைத்து Christina Sophia Guldberg என்பவரை  27 நவம்பர்  1776 அன்று திருமணம் செய்தார். 42 ஆண்டுகள் இந்தியாவில் இடையறாது பணியாற்றினார். இந்த 42 ஆண்டுகளில் இவர் 20 பள்ளிகளை நிறுவியதாக அறிய முடிகிறது. குறுகிய கால இடைவெளியில் இவரது மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது இவரை உலுக்கிப் போட்டது. அவரது இறுதி காலங்களில் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. நுரையீரல் சார்ந்த நோய்களும் இருந்தன. கடைசியில் பக்கவாதம் வந்து 1813 செப்டம்பர் மாதம் முதல் தேதி  மரணமடைந்தார். . தரங்கம்பாடியில் புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 

பின் குறிப்பு -1 

அருட்திரு. ஜான் அவர்களுடன் பயணித்த Wilhelm Jacobus Müller 24, மே 1734 இல் Waldeck என்ற இடத்தில பிறந்தவர். ஹலே பல்கலைக்கழகத்தில் குருத்துவ பட்டம் பெற்று 1769 இல் கோபன்ஹேகனில் திரு. ஜான் உள்ளிட்ட பலருடன்   பேராயர் Ludvig Harboe என்பவரால் குருத்துவ அபிஷேகம் பெற்றவர். 1771 ஜூன் மாதம் 13 ஆம் தேதி  தரங்கம்பாடி வந்தவர் மனச்சோர்வுடனே இருந்து, பக்கவாதத்தினால்    1771 டிசம்பர் 30இல் இறந்து விட்டார்.1771இன் இறுதி தினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.   இப்படி சொற்ப நாட்களில் இறந்து போன ஒரு கூட்ட மிஷினரிகளில் மிகவும் பரிதவிக்க தக்கவர் அருட்திரு. முல்லர். தரங்கம்பாடி புதிய எருசலேம் சபை வளாகத்தில் இவரது கல்லறை எண் 2. இவர் கல்லறையில் ஏசாயா 45: 15 என்று பொறிக்கப்பட்டுள்ளது. (இஸ்ரவேலரின் தேவனும் ரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்).

பின் குறிப்பு-2  

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி  அருட்திரு. ஜான் அவர்களின் கல்லறையில் C.S.John 1813 & 4 Children என்கிற குறிப்பு இருக்கிறது. சிறு முயற்சிக்குப் பின் கர்த்தர் அருட்திரு. ஜான் அவர்களுக்கு கொடுத்து, பின்  எடுத்துக்கொண்ட அன்பு குழந்தைகளின் விபரங்கள் கிடைத்தது. 

Julie Susanne- 4 வயது, இறந்த நாள் 8 பெப்ருவரி 1782

Ernst Christian- 2 1/2 வயது. இறந்த நாள் 8 மே 1782

Gottlieb Friederich- 1 1/2 வயது, இறந்த நாள் 10 ஜனவரி 1783

Ernst Gottlieb- 3 வயது, இறந்த நாள் 15 செப்டம்பர் 1787

பின் குறிப்பு-3

அருட்திரு. ஜான் அவர்களின் துணைவியார் Christina Sophia Guldberg எங்கு, எப்பொழுது மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்கிற விவரத்தினை தேடியும் கண்டுபிடிக்க  இயலவில்லை. தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக