திங்கள், 3 நவம்பர், 2025

3. ரேனியஸ்-17

 ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே.... 
(கடிதங்கள்,மனிதர்கள், இடங்கள், சபைகள்)


ரேனியஸ் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி "Memoir of C.T.E. Rhenius, by his son by J. Rhenius"   என்கிற அவரது மகன் J.ரேனியஸ் தொகுத்த  நூலில் உள்ளது.

ரேனியஸ் 17 ஆம் வயது முதல் எழுதிய நாட்குறிப்பின் பாகங்களை நாம் காண முடிகிறது. அந்த கால கட்டங்களில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து வந்த பின் அவர் மெல்ல ஆங்கிலத்தில் எழுத துவங்குகிறார். அது வரையிலான நாட்குறிப்புகள் ஜெர்மானிய மொழியில் இருந்தே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேனியஸின் ஆரம்ப கால ஆங்கிலத்தையும், முதிர்ச்சி பெற்ற பின் பயன்படுத்திய ஆங்கிலத்தையும் உற்று நோக்கும் போது , ரேனியஸின் மொழி ஆளுமை குறித்து அவரது மகன்  பெருமிதம் கொள்கின்றார். சில ஆண்டுகளுக்கு முன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரேனியஸ் ஐயர் சி,.எம்.எஸ் ற்கு, எழுதிய கடிதங்களை வாசித்த ஆய்வாளர் எலிசபெத் வைல்ட் என்பவரும், ரேனியஸ் ஐயரின் ஆங்கில மொழிப் புலமை குறித்த தனது ஆச்சரியங்களை என்னிடம்  பதிவு செய்துள்ளார்.

" ஒரு தகப்பனின் அன்போடு நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன், ஒரு மகனுக்குரிய உரிமைகளை அனுபவித்தேன்"

இது பச்மானில் உள்ள பெரியப்பாவின் எஸ்டேடில் கிடைத்த உபசரிப்பை குறித்து 1807 இல் ரேனியஸ் எழுதியது. அவரது எஸ்டேட்டைக் கவனித்துக்கொண்டு இருந்திருந்தால் ஒருவேளை, , அவரது சொந்த   தேசத்தில் கிடைத்தற்கரிய ஒரு வாழ்வாக அவருக்கு அமைந்திருக்கும். 

ஆனால், 1807 ஆம் ஆண்டு அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பின்னாட்களில் திரு. ரேனியஸ் தனது  ஆரம்பகால அனுபவத்தை குறித்து  இவ்வாறு எழுதுவதை காண முடிகிறது.
 
" தெய்வீக காரியங்கள் குறித்த அறிவில் நான் நடத்தப்பட்டதால் 1807 ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு.  இந்த  சூழ்நிலையை  நான் விளக்க முற்பட்டால் அது நீண்டதாக இருக்கும். நம் ரட்சகரின் ஒரு வசனம் நிறைவேறுவதை என் சொந்த அனுபவத்தில் மறுபடியும் கண்டேன். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்கிற வசனமும்  ‘என்னைப் பின்பற்றி வா‘ என்ற  கட்டளையுமே என் ஆத்துமாவை மீட்கும் மாற்றத்தை என்னுள் கொண்டு வர காரணமாயிருந்தன. கிறிஸ்து யேசுவில் இருந்த , ஆண்டவரின் கிருபை என் உள்ளத்திலும் வாசம் செய்ய துவங்கி, சுவிசேஷத்தின் தூய ஒளியில் என்னை தெளிவுபடுத்தியது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்கிற யோவான் 3 ஆம் அதிகார வசனத்தை என்னால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது.

நித்திய வாழ்வும் , மெய்யான தேவனுமாக எனக்கு வெளிப்படுத்திய கிறிஸ்து ஏசுவின் ஆவியானவர் என் இருதயத்தில் திறந்த வாசலை கண்டதோடு உறுதியான முடிவோடு அவரைப் பின்பற்றும் ஈர்ப்பைத் தந்தார்.

ஒவ்வொரு நாளும் நான் என்னையும்,  என் தீவிர பாவ நிலைமையை உணரும் அறிவிலும் வளர்ந்தேன். ஏழைப் பாவிகளை நோக்கிய தேவனின் அன்பு மற்றும் கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்ட மீட்பு குறித்த அறிவிலும் மேம்பட்டேன். என்னை நான் ஒப்புவித்த ஆசிர்வாதமான ஆவியானவர் மூலமாக, இயேசுவை பின்பற்றவும் , எதிர்காலத்தில் பாவத்திலிருந்து விலகவும் , என் ஆத்துமாவையும் , சரீரத்தையும் அவற்றின் எல்லா வல்லமையோடும் நேர்மையின் பாதையில் நடக்க அர்ப்பணிக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன்.   சுருக்கமாக சில வார்த்தைகளில் சொல்லுவதானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உயிர்ப்புள்ள விசுவாசம் என்னுள்  உருப்பெற துவங்கியிருந்தது."

எனது வாழ்வின் இந்த மகிழ்வான தருணங்கள் குறித்து நான் வேறென்ன சொல்ல முடியும்? இது  நான் விளக்கிச் சொல்ல கூடாததாக இருக்கிறது.  இதை என்னில் நிகழ்த்திய, ஒரு சிறந்த பணியை துவங்கிய , அவரைப்  பற்றி நான் என்ன சொல்லுவேன்?  துதிக்கப்படுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். நானோ இன்னும் நிறைவற்றவனாக,  பாவத்தால் ஏராளமாக கறைபட்டவனாக இருக்கிறேன். உண்மையில் இது என் தேவனின் முன் என்னை தாழ்த்துகிறது. அதே நேரம்,   உலகம்  தரக்கூடாத, உலகத்தால் மறுக்கப்பட்ட என் ரட்சகரின் குணமாக்கும் வல்லமையை நான் உணர வைத்தது. கிறிஸ்துவின் அன்பான கிருபை என்னை அந்த மகிழ்ச்சிக்கு நேராக  மென்மேலும் நெருங்கிவரச் செய்யும் என்றும், அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துவைப் போல மாற வைக்கும் என்றும் இந்த வசனத்தின் மூலம் நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கே புகழும் மகிமையும் உண்டாகட்டும். அறியாமையினாலோ, அழுக்கினாலோ, இந்த உலகம் முழுவதும் அவருக்கு எதிராக வந்தாலும், அவரே கர்த்தர் என்பதை நான் மறுதலிக்க கூடாதபடி என் அனுபவங்கள்  எனக்கு வல்லமையை தரும். அவரே எல்லாவற்றிக்கும் சதாகாலமும் தேவன்."

ரேனியஸ் மனதில் இந்த பெருமாற்றத்தை விதைத்த காரணிகளாக நான் கருதுவது அவரது பெரியப்பா வீட்டில் அவர் வாசித்த புத்தகங்கள். மிஷினரி சரிதைகள், குறிப்பாக   மொரேவியன் திருச்சபை குறித்த நூல்கள்   அவரது கவனத்தை ஈர்த்தன. அந்த  புத்தகங்களின் தாக்கம் அவரை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் துவங்கின என்பதை அறிய முடிகிறது.

மற்றவர்கள் என்னமும் செய்துவிட்டுப் போகட்டும். உண்மை தேவனின் ரட்சிப்பை  கிறிஸ்து வழியே அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பது தனது அடிப்படை கடமை அல்லவா என்கிற கேள்வி அவருக்குள் தீவிரமாக எழுந்தது.

 தனது பணி என்று ரேனியஸ் கருதியதை அவரது குடும்பத்தினரால் புரிந்து கொள்ள முடையவில்லை. ஆனால் அவரது பெரியப்பாவிற்குள் ஒரு நண்பன், ஒரு நல் ஆலோசகன் இருப்பதை ரேனியஸ் உணர்ந்தார். ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும், விரைவில் தேவ சித்தத்திற்கு மகிழ்ச்சியுடனும் , மனமுவந்தும் அர்ப்பணிக்க குடும்பத்தினர் இணங்கினர்.

 பெரியப்பாவும் ரேனியஸும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்த போதிலும், தங்களுடைய விருப்பங்களையும் , உலக பிரகாரமான ஆர்வங்களையும், விட்டு விட்டு தெளிவாக உணரப்பட்ட  தேவ வழிநடத்துதலை மட்டும் பின்பற்றுவது என முடிவெடுத்தனர்.

 இதன் பின் அநேக  ஆண்டுகள் அவர்கள் இருவரிடையேயும் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. வயோதிகம் காரணமாக பெரியப்பாவின்  கண்பார்வை மங்கி, கைகள் நடுங்கத் துவங்கியபோதும் , அவர் தன்னுடன் இருந்தவர்களுக்கு கடித சாராம்சத்தைச் சொல்லி எழுதவைத்து, நடுங்கும் தன் கரங்களால் கையெழுத்தை மட்டும் போட்டு ரேனியஸிற்கு  அனுப்பிக் கொண்டிருந்தார்.

ரேனியஸ் கடவுளுடைய ஊழியத்திற்கு தன்னை 1807 டிசம்பர் 7ஆம் தேதி ஒப்புக் கொடுத்ததை மூன்று ஆண்டுகளுக்கு பின் அவர் எழுதிய கீழே உள்ள நாட்குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

டிசம்பர் 7, 1810

எனக்குள் விழிப்புணர்வு ஏற்பட்ட நாளின் வருடாந்திர நினைவு தினமாகிய இந்த நாளில் நான் என்னை அவருக்கு மறுபடியும்  அர்ப்பணிப்புச் செய்கிறேன். இன்றைய தினத்தை நான் அமைதியான தியானத்தில் கழித்தேன். கடவுளுக்கு போதுமான அளவு நன்றி உள்ளவனாக நான்  இருப்பதாக உணர முடியவில்லை

ஞாயிறு, 2 நவம்பர், 2025

2. ரேனியஸின் குடும்பம்

 ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே (கடிதங்கள், மனிதர்கள், இடங்கள், சபைகள்)

    
                                                    


🪶 ஆரம்ப காலத்தில் இந்தியா வந்த ஆயிரக்கணக்கான  மிஷினரிகளில் பெரும்பாலோரின் இந்திய பயணம் ஒரு வழி பயணமாகவே அமைந்து விட்டது.

🪶  தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியவர்கள் வெகு சொற்பம். ஒரு முறையேனும் தாய் நாட்டிற்கு சென்று வந்தவர்கள் கூட எண்ணிக்கையில் வெகு சிலரே.

 🪶 இந்தியாவியிலேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நிறைய மிஷினரிகளில் சிலர் பெயர்கள் மட்டுமே இன்று நாம் அறிந்திருக்கிறோம். பெயர் தெரியாத, எங்கு புதைக்கப்பட்டார்கள் என்கிற விவரம் கூட இல்லாத மிஷனரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிது. 

🪶 ஓரளவு நாம் அறிய வருகிற மிஷினரிகளில் கூட, அதிலும் குறிப்பாக இளம் வயதில் மரித்துப் போன,   அவர்கள் வாழ்விற்கு பின், அவர்களது குடும்பம் என்ன ஆனது என்பதை யாரும் எண்ணிக் கூட பார்த்ததில்லை.

 🪶 ரேனியஸின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல.

🪶  வருங்காலங்களில் ரேனியஸ் குறித்து நாம் எடுத்திருக்கும் பெரு முயற்சி போல, எல்லா மிஷினரிகளின் வாழ்க்கையும் ஆழமாக பதியப்பட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பம். அந்த விருப்பத்தின் சிறு தொடக்கமாக ரேனியஸ் தனது 48வது வயதில் மரிக்கும் போது  விட்டுச்  சென்ற குடும்பம் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வின் சிறு பகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.

🪶 ரேனியஸிற்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பதிலிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளன. 

🪶 ரேனியஸ் மறைவை ஒட்டி இரங்கல் குறிப்புகள் வெளியிட்ட பத்திரிகைகளில் ஒன்று அவருக்கு ஆறு குழந்தைகள் என்றும், மற்றொன்று ஒன்பது குழந்தைகள் என்றும் பதிவிட்டுள்ளன.

🪶  ரேனியஸின் வம்சாவழியை சேர்ந்த ஒருவர்  சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பித் தந்த குடும்ப மரத்தில் 15 குழந்தைகளின் பெயர்கள் உள்ளன. 

🪶  எரிக் பிரிக்கன்பேர்க் ரேனியஸ் மரணத்திற்கு பின்னான சம்பவங்களை சொல்லும் போது, ரேனியஸின் விதவை  மனைவிக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும், ஒன்பது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கவும் சி.எம்.எஸ் முன் வந்ததை குறிப்பிடுகிறார்.

🪶  எனவே, ரேனியஸ் மரிக்கும் போது அவருடைய ஒன்பது குழந்தைகள் உயிரோடு இருந்ததை அறிய முடிகிறது.  ரேனியஸ் நாட்குறிப்புகளில் அவர் தனது மூன்று குழந்தைகளின் மரணத்தை பதிவு செய்துள்ளார்.  

🪶 ரேனியஸ் கல்லறை குறித்து கூறும் போது அவர் கல்லறை அருகே இருந்த இரு கல்லறைகளில் ஒன்று அவர் மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் மரணமடைந்த பெண் குழந்தையின் கல்லறை என்கிற செவி வழி செய்தி உண்டு.  அந்த குழந்தையின் பெயர் நமக்கு கிடைக்கவில்லை.

🪶  இப்படியான பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, கிடைத்த தரவுகளை வைத்து ஒரு பட்டியலை தயாரிக்க முயன்றேன். என்ன முயன்றும்...முழு பட்டியலையும் உறுதி பட தர இயலவில்லை.

🪶  வரும் காலங்களில், இன்னும் மேம்பட்ட ஆய்வுகள் செய்யும் பொழுது அந்த துல்லியமான பெயர் பட்டியல் கிடைக்கக் கூடும். 

🪶 அதுவரை, இந்த உறுதி செய்யாத பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன்.

வாழ்விணையர்

 அன்னா வான் சாமரின். 1800 இல் நாகபட்டிணத்தில் ஒரு டச்சு வணிக குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது திருமணம் 1816 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனில், திருமணத்தின் போது வான் சாமரின் அம்மையாரின் வயது 16, ரேனியஸ் இறக்கும் போது  அவர் மனைவியின் வயது 38. 

21.08.1874 இல் பெங்களூருவில் இவர் நித்திரை அடைந்ததாக அறிய முடிகிறது. 




இனி குழந்தைகள் குறித்த விபரங்கள்:

1. ரேனியஸின் முதல் குழந்தை தியோடோஸியா  என்கிற பெண். 17.01.1817 இல் பிறந்த இந்த குழந்தை 22.11.1818 நாள் அன்று இரண்டு வயது பூர்த்தியாகும் முன்பே இறந்து போனது. (ரேனியஸ் நாட்குறிப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)

2. ரேனியஸின் இரண்டாவது குழந்தை ஜோஸ்யா ரேனியஸ். 1818 இல் பிறந்தவர். ரேனியஸின் மரணத்திற்கு பின் இஸ்லிங்க்டனில் உள்ள சி.எம்.எஸ் மிஷினரி பயிற்சிப் பள்ளியில் இறையியல் கற்று ஸ்காட்லாந்தில் போதகராக பணியாற்றியவர். ரேனியஸின் நாட்குறிப்புகளை 1841 ஆம் ஆண்டு வெளியிட்டவர் இவர் தான்.  

11-02-1878 இல் ஸ்காட்டிலாந்தில் இறந்தார். (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது )

3. ரேனியஸின் மூன்றாவது குழந்தை காத்ரீனா ரேனியஸ் .  இவர் 1819 இல் பிறந்தவர். 1835 ஆம் ஆண்டு, இக்கட்டான கால கட்டங்களில் ரேனியசுடன் தோளோடு தோள் நின்ற இளம் மிஷினரிகளில் ஒருவரான முல்லர் ஐயரை மணந்தார். முல்லர் ஐயரும் இவரும் சுவிசேஷபுரத்தில் தங்கி இருந்து ஊழியம் செய்து வந்தனர். ஆனால், 1843 இல் முல்லர் ஐயர் அகால மரணம் அடைந்தார். 

முல்லரின் மரணத்திற்கு வெகு காலத்திற்கு பின் காதரின் எல்.எம்.எஸ் மிஷினரி  பெஞ்சமின் ரைஸ் என்பவரை மறுமணம் செய்தார். பெங்களூருவில் பணியாற்றிய ரைஸ் தனது முதல் மனைவி ஜேன் என்பவரை 1864 இல் இழக்கக் கொடுத்தவர். ஜேன் நிர்வகித்து வந்த பெண்களுக்கான உறைவிட பள்ளியான எல்.எம்.எஸ் பள்ளியை காதரின் நிர்வகித்தார். 

1887 இல் கேத்தரின் மரணம் அடைந்தார். அதன் பின் பள்ளியை அவரது மகள் ஹாரிட் முல்லர் , அவர் ஓய்வு பெற்ற 1911 வரை நிர்வகித்தார். இந்த பள்ளி மித்ராலயா பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக இன்றும் பெங்களூரு மிஷன் சாலையில் இயங்கி வருகிறது. 1877 இல் மரணம் அடைந்த பெஞ்சமின் ரைஸ் நினைவாக பெங்களூருவில் ஆலயம் ஒன்றும்  உள்ளது. 

(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)

4. ரேனியஸ் ஐயரின் நான்காவது குழந்தை சார்லஸ் ரேனியஸ்.  இவர் 1821 இல் பிறந்தவர். இவரும் குருத்துவ பணியில் ஈடுபட்டவர். 1849-50 இல் ரேனியஸ் உருவாக்கிய டோனாவூரில் இவரும் மிஷினரியாக பணி புரிந்துள்ளார். பெங்களூருவில் பணியாற்றிய இவர் பெயரால் அங்கு "ரேனியஸ் தெரு" என்கிற தெரு  பெங்களூருவில் உள்ளது. இவர் 1874 இல் தனது 53வது வயதில் இறந்தார். 


 (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)  

5. ரேனியஸ் ஐயரின் ஐந்தாவது குழந்தை 1822 இல் பிறந்த திமோத்தி ரேனியஸ் என்னும் ஆண். திமோத்தி அகஸ்ட்டா சாரா கேத்தரின் என்பவரை 1849இல் சென்னையில் மணம் செய்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள். இவர் 1888இல் சென்னையில் மரணமடைந்தார்.(உறுதி செய்ய முடியவில்லை. )

6. ரேனியஸின் ஆறாவது குழந்தை 1823 இல் பிறந்த லூயிஸ் . லூயிஸ் சிறுவனாக இருந்த போதே 04.03.1834 இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான்.(ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)

7. ரேனியஸின் ஏழாவது குழந்தை  தியோடோஸியா  என்கிற பெண். இது இறந்து போன தனது முதல் மகளுக்கு ரேனியஸ் இட்ட பெயர். 1824 இல் பிறந்த இந்த குழந்தையும் நீண்ட நாள் வாழ்ந்திருக்கவில்லை. ஒரு வருடம் இரண்டு  மாதங்கள்  மற்றும் ஏழு நாட்களில்  08.12.1825 அன்று இந்த குழந்தையும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது. (ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின்  அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)  

8. ரேனியஸிற்கு எட்டாவதாக லுய்ஸ் எனும் பெண் குழந்தை 17.05.1828 இல் பிறந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இவரை குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.   (உறுதி செய்ய முடியவில்லை. )  

9. 02.07.1829 இல் பிறந்த ரேனியஸின் ஒன்பதாவது குழந்தை லிடியா கரோலின் .  1852 இல் இவரது திருமணம் ஜோசப் பெஞ்சமின் கோல்ஸ் எனும் எல்.எம்.எஸ் மிஷினரியுடன் நடைபெற்றது. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் 1869 இல் மரித்தார். (J.B. கோல்ஸ் அவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது)

10. 08.07.1831 அன்று பிறந்த ரேனியஸின் பத்தாவது குழந்தை சோபியா  ஹாரிட் எனும் பெண்.  இவர் 1852 இல் ஜான் சார்ஜெண்ட் எனும் மிஷினரியை மணந்தார். 1900 ஜூனில் இங்கிலாந்தில் மரணமடைந்தார். (எரிக்பிரிக்கன்பேர்க் அவர்களின் பதிவு வழியே உறுதி செய்யப்பட்டது) 

11. 17.03.1833 இல் பிறந்த ராபர்ட் ரேனியஸின் 11 வது  குழந்தை. 1871இல்  யுபிமியா டெய்லர் என்பவரை  மணம் செய்த இவருக்கு மக்ஸிமிலன் , வயலட் என இரண்டு குழந்தைகள். இவரை குறித்து வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )    

12. லுயிசா வில்ஹெல்மினா 14.11.1834 இல் பிறந்த ரேனியஸின் 12 வது குழந்தை. லெவெலின் என்பவரை மணம் செய்த இவர் ஐந்து குழந்தைகளுக்கு தாயாவார். இவர் 1917 இல் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். (உறுதி செய்ய முடியவில்லை. )    

13. அன்னி  தியோடரா  1835 நவம்பரில் பிறந்த ரேனியஸின் 13 வது  குழந்தை. இவர் 1873 இல் பாளையம்கோட்டையில் மரித்தார் என்பதை தவிர வேறு குறிப்புகள் இல்லை.  (உறுதி செய்ய முடியவில்லை. )

1. ரேனியஸ்- ஒரு முன்குறிப்பு

ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....(மனிதர்கள், இடங்கள், சபைகள்)



முழுப்பெயர்: 

சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ்- (Charles Theopilus Ewald Rhenius)

பிறந்த தினம்: 1790 நவம்பர் 5

பிறந்த ஊர்     : மேற்கு ப்ரஷ்யாவில் (Prussia) இருந்த க்ரொடன்ஸ் கோட்டை. (Fortress Graudens)

-ப்ரஷ்யா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.

தகப்பனார்:

ஒதோ ரேனியஸ். (Otto Gottileb Nicolaus Rhenius) ப்ரஷ்ய இராணுவத்தில் தரைப்படை அதிகாரி. ரேனியஸ் ஆறு வயதாய் இருக்கும் போது தந்தையற்றவரானார்.

தாயார்:  கேத்தரீனா டோரதி. (Catherina Dorothea Schimann)

உடன் பிறந்தவர்கள்:

ஜான் வில்லியம் ரேனியஸ்- மூத்த சகோதரர்.

ஆடம் பிரடெரிக் ரேனியஸ்- இளைய சகோதரர்.

சோபியா காதரீன் ரேனியஸ்- இளைய சகோதரி

பள்ளிக்கல்வி:

மெரின்வர்டரில் (Marienwerden) உள்ள கதீட்ரல் பள்ளி (14 வயது வரை)

14-17 வயதுகள்:

பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த தனது உறவினர் அலுவலகத்தில் பணி.

மிஷினெரி அழைப்பு:

1807 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத இவரது பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் (Wilham A Rhenius) அழைப்பின் பேரில் மெமெல் ( Memel) என்ற இடத்திற்குச் செல்கிறார்.

இங்கு இருக்கும் போது மொரோவியன் இயக்கத்தின் வெளியீடுகளால் தூண்டப்பட்டு மிஷினரியாக செல்ல முடிவெடுக்கிறார்.

(மெமெல் இப்பொழுது Klaipeda என பெயர் மாற்றம் செய்யப்பட்டு லித்துவேனியாவில் உள்ளது).

இறையியல் கல்வி:

1811 ஆம் ஆண்டு ஜான் ஜெனிக்கே அவர்களால் துவங்கப்பட்ட இறையியல் கல்லூரியில் இணைந்தார். ஆகஸ்ட் 7, 1812இல் குருத்துவ அபிஷேகம் பெற்றார்.

(இந்த கல்லூரி இப்பொழுது மூடப்பட்டு விட்டது)