Sirakugal
Mission, Mission Fields and Missionaries
திங்கள், 3 நவம்பர், 2025
3. ரேனியஸ்-17
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....
ஞாயிறு, 2 நவம்பர், 2025
2. ரேனியஸின் குடும்பம்
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே (கடிதங்கள், மனிதர்கள், இடங்கள், சபைகள்)
🪶 தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பியவர்கள் வெகு சொற்பம். ஒரு முறையேனும் தாய் நாட்டிற்கு சென்று வந்தவர்கள் கூட எண்ணிக்கையில் வெகு சிலரே.
🪶 இந்தியாவியிலேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நிறைய மிஷினரிகளில் சிலர் பெயர்கள் மட்டுமே இன்று நாம் அறிந்திருக்கிறோம். பெயர் தெரியாத, எங்கு புதைக்கப்பட்டார்கள் என்கிற விவரம் கூட இல்லாத மிஷனரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிது.
🪶 ஓரளவு நாம் அறிய வருகிற மிஷினரிகளில் கூட, அதிலும் குறிப்பாக இளம் வயதில் மரித்துப் போன, அவர்கள் வாழ்விற்கு பின், அவர்களது குடும்பம் என்ன ஆனது என்பதை யாரும் எண்ணிக் கூட பார்த்ததில்லை.
🪶 ரேனியஸின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல.
🪶 வருங்காலங்களில் ரேனியஸ் குறித்து நாம் எடுத்திருக்கும் பெரு முயற்சி போல, எல்லா மிஷினரிகளின் வாழ்க்கையும் ஆழமாக பதியப்பட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பம். அந்த விருப்பத்தின் சிறு தொடக்கமாக ரேனியஸ் தனது 48வது வயதில் மரிக்கும் போது விட்டுச் சென்ற குடும்பம் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வின் சிறு பகுதியை உங்கள் முன் வைக்கிறேன்.
🪶 ரேனியஸிற்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பதிலிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளன.
🪶 ரேனியஸ் மறைவை ஒட்டி இரங்கல் குறிப்புகள் வெளியிட்ட பத்திரிகைகளில் ஒன்று அவருக்கு ஆறு குழந்தைகள் என்றும், மற்றொன்று ஒன்பது குழந்தைகள் என்றும் பதிவிட்டுள்ளன.
🪶 ரேனியஸின் வம்சாவழியை சேர்ந்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பித் தந்த குடும்ப மரத்தில் 15 குழந்தைகளின் பெயர்கள் உள்ளன.
🪶 எரிக் பிரிக்கன்பேர்க் ரேனியஸ் மரணத்திற்கு பின்னான சம்பவங்களை சொல்லும் போது, ரேனியஸின் விதவை மனைவிக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும், ஒன்பது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கவும் சி.எம்.எஸ் முன் வந்ததை குறிப்பிடுகிறார்.
🪶 எனவே, ரேனியஸ் மரிக்கும் போது அவருடைய ஒன்பது குழந்தைகள் உயிரோடு இருந்ததை அறிய முடிகிறது. ரேனியஸ் நாட்குறிப்புகளில் அவர் தனது மூன்று குழந்தைகளின் மரணத்தை பதிவு செய்துள்ளார்.
🪶 ரேனியஸ் கல்லறை குறித்து கூறும் போது அவர் கல்லறை அருகே இருந்த இரு கல்லறைகளில் ஒன்று அவர் மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் மரணமடைந்த பெண் குழந்தையின் கல்லறை என்கிற செவி வழி செய்தி உண்டு. அந்த குழந்தையின் பெயர் நமக்கு கிடைக்கவில்லை.
🪶 இப்படியான பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, கிடைத்த தரவுகளை வைத்து ஒரு பட்டியலை தயாரிக்க முயன்றேன். என்ன முயன்றும்...முழு பட்டியலையும் உறுதி பட தர இயலவில்லை.
🪶 வரும் காலங்களில், இன்னும் மேம்பட்ட ஆய்வுகள் செய்யும் பொழுது அந்த துல்லியமான பெயர் பட்டியல் கிடைக்கக் கூடும்.
🪶 அதுவரை, இந்த உறுதி செய்யாத பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன்.
வாழ்விணையர்
அன்னா வான் சாமரின். 1800 இல் நாகபட்டிணத்தில் ஒரு டச்சு வணிக குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது திருமணம் 1816 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனில், திருமணத்தின் போது வான் சாமரின் அம்மையாரின் வயது 16, ரேனியஸ் இறக்கும் போது அவர் மனைவியின் வயது 38.
21.08.1874 இல் பெங்களூருவில் இவர் நித்திரை அடைந்ததாக அறிய முடிகிறது.
இனி குழந்தைகள் குறித்த விபரங்கள்:
1. ரேனியஸின் முதல் குழந்தை தியோடோஸியா என்கிற பெண். 17.01.1817 இல் பிறந்த இந்த குழந்தை 22.11.1818 நாள் அன்று இரண்டு வயது பூர்த்தியாகும் முன்பே இறந்து போனது. (ரேனியஸ் நாட்குறிப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
2. ரேனியஸின் இரண்டாவது குழந்தை ஜோஸ்யா ரேனியஸ். 1818 இல் பிறந்தவர். ரேனியஸின் மரணத்திற்கு பின் இஸ்லிங்க்டனில் உள்ள சி.எம்.எஸ் மிஷினரி பயிற்சிப் பள்ளியில் இறையியல் கற்று ஸ்காட்லாந்தில் போதகராக பணியாற்றியவர். ரேனியஸின் நாட்குறிப்புகளை 1841 ஆம் ஆண்டு வெளியிட்டவர் இவர் தான்.
11-02-1878 இல் ஸ்காட்டிலாந்தில் இறந்தார். (பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது )
3. ரேனியஸின் மூன்றாவது குழந்தை காத்ரீனா ரேனியஸ் . இவர் 1819 இல் பிறந்தவர். 1835 ஆம் ஆண்டு, இக்கட்டான கால கட்டங்களில் ரேனியசுடன் தோளோடு தோள் நின்ற இளம் மிஷினரிகளில் ஒருவரான முல்லர் ஐயரை மணந்தார். முல்லர் ஐயரும் இவரும் சுவிசேஷபுரத்தில் தங்கி இருந்து ஊழியம் செய்து வந்தனர். ஆனால், 1843 இல் முல்லர் ஐயர் அகால மரணம் அடைந்தார்.
முல்லரின் மரணத்திற்கு வெகு காலத்திற்கு பின் காதரின் எல்.எம்.எஸ் மிஷினரி பெஞ்சமின் ரைஸ் என்பவரை மறுமணம் செய்தார். பெங்களூருவில் பணியாற்றிய ரைஸ் தனது முதல் மனைவி ஜேன் என்பவரை 1864 இல் இழக்கக் கொடுத்தவர். ஜேன் நிர்வகித்து வந்த பெண்களுக்கான உறைவிட பள்ளியான எல்.எம்.எஸ் பள்ளியை காதரின் நிர்வகித்தார்.
1887 இல் கேத்தரின் மரணம் அடைந்தார். அதன் பின் பள்ளியை அவரது மகள் ஹாரிட் முல்லர் , அவர் ஓய்வு பெற்ற 1911 வரை நிர்வகித்தார். இந்த பள்ளி மித்ராலயா பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக இன்றும் பெங்களூரு மிஷன் சாலையில் இயங்கி வருகிறது. 1877 இல் மரணம் அடைந்த பெஞ்சமின் ரைஸ் நினைவாக பெங்களூருவில் ஆலயம் ஒன்றும் உள்ளது.
(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
4. ரேனியஸ் ஐயரின் நான்காவது குழந்தை சார்லஸ் ரேனியஸ். இவர் 1821 இல் பிறந்தவர். இவரும் குருத்துவ பணியில் ஈடுபட்டவர். 1849-50 இல் ரேனியஸ் உருவாக்கிய டோனாவூரில் இவரும் மிஷினரியாக பணி புரிந்துள்ளார். பெங்களூருவில் பணியாற்றிய இவர் பெயரால் அங்கு "ரேனியஸ் தெரு" என்கிற தெரு பெங்களூருவில் உள்ளது. இவர் 1874 இல் தனது 53வது வயதில் இறந்தார்.
(பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது)
5. ரேனியஸ் ஐயரின் ஐந்தாவது குழந்தை 1822 இல் பிறந்த திமோத்தி ரேனியஸ் என்னும் ஆண். திமோத்தி அகஸ்ட்டா சாரா கேத்தரின் என்பவரை 1849இல் சென்னையில் மணம் செய்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள். இவர் 1888இல் சென்னையில் மரணமடைந்தார்.(உறுதி செய்ய முடியவில்லை. )
6. ரேனியஸின் ஆறாவது குழந்தை 1823 இல் பிறந்த லூயிஸ் . லூயிஸ் சிறுவனாக இருந்த போதே 04.03.1834 இல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான்.(ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)
7. ரேனியஸின் ஏழாவது குழந்தை தியோடோஸியா என்கிற பெண். இது இறந்து போன தனது முதல் மகளுக்கு ரேனியஸ் இட்ட பெயர். 1824 இல் பிறந்த இந்த குழந்தையும் நீண்ட நாள் வாழ்ந்திருக்கவில்லை. ஒரு வருடம் இரண்டு மாதங்கள் மற்றும் ஏழு நாட்களில் 08.12.1825 அன்று இந்த குழந்தையும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது. (ரேனியஸ் நாட்குறிப்ப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது)
8. ரேனியஸிற்கு எட்டாவதாக லுய்ஸ் எனும் பெண் குழந்தை 17.05.1828 இல் பிறந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. இவரை குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
9. 02.07.1829 இல் பிறந்த ரேனியஸின் ஒன்பதாவது குழந்தை லிடியா கரோலின் . 1852 இல் இவரது திருமணம் ஜோசப் பெஞ்சமின் கோல்ஸ் எனும் எல்.எம்.எஸ் மிஷினரியுடன் நடைபெற்றது. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் 1869 இல் மரித்தார். (J.B. கோல்ஸ் அவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது)
10. 08.07.1831 அன்று பிறந்த ரேனியஸின் பத்தாவது குழந்தை சோபியா ஹாரிட் எனும் பெண். இவர் 1852 இல் ஜான் சார்ஜெண்ட் எனும் மிஷினரியை மணந்தார். 1900 ஜூனில் இங்கிலாந்தில் மரணமடைந்தார். (எரிக்பிரிக்கன்பேர்க் அவர்களின் பதிவு வழியே உறுதி செய்யப்பட்டது)
11. 17.03.1833 இல் பிறந்த ராபர்ட் ரேனியஸின் 11 வது குழந்தை. 1871இல் யுபிமியா டெய்லர் என்பவரை மணம் செய்த இவருக்கு மக்ஸிமிலன் , வயலட் என இரண்டு குழந்தைகள். இவரை குறித்து வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
12. லுயிசா வில்ஹெல்மினா 14.11.1834 இல் பிறந்த ரேனியஸின் 12 வது குழந்தை. லெவெலின் என்பவரை மணம் செய்த இவர் ஐந்து குழந்தைகளுக்கு தாயாவார். இவர் 1917 இல் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். (உறுதி செய்ய முடியவில்லை. )
13. அன்னி தியோடரா 1835 நவம்பரில் பிறந்த ரேனியஸின் 13 வது குழந்தை. இவர் 1873 இல் பாளையம்கோட்டையில் மரித்தார் என்பதை தவிர வேறு குறிப்புகள் இல்லை. (உறுதி செய்ய முடியவில்லை. )
1. ரேனியஸ்- ஒரு முன்குறிப்பு
ரேனியஸின் நாட்குறிப்புகள் வழியே....(மனிதர்கள், இடங்கள், சபைகள்)
சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ்- (Charles Theopilus Ewald Rhenius)
பிறந்த தினம்: 1790 நவம்பர் 5
பிறந்த ஊர் : மேற்கு ப்ரஷ்யாவில் (Prussia) இருந்த க்ரொடன்ஸ் கோட்டை. (Fortress Graudens)
-ப்ரஷ்யா இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லை. போலந்தின் ஒரு பகுதியாக உள்ளது.
தகப்பனார்:
ஒதோ ரேனியஸ். (Otto Gottileb Nicolaus Rhenius) ப்ரஷ்ய இராணுவத்தில் தரைப்படை அதிகாரி. ரேனியஸ் ஆறு வயதாய் இருக்கும் போது தந்தையற்றவரானார்.
தாயார்: கேத்தரீனா டோரதி. (Catherina Dorothea Schimann)
உடன் பிறந்தவர்கள்:
ஜான் வில்லியம் ரேனியஸ்- மூத்த சகோதரர்.
ஆடம் பிரடெரிக் ரேனியஸ்- இளைய சகோதரர்.
சோபியா காதரீன் ரேனியஸ்- இளைய சகோதரி
பள்ளிக்கல்வி:
மெரின்வர்டரில் (Marienwerden) உள்ள கதீட்ரல் பள்ளி (14 வயது வரை)
14-17 வயதுகள்:
பல்கா என்ற ஊரில் அரசு அதிகாரியாக இருந்த தனது உறவினர் அலுவலகத்தில் பணி.
மிஷினெரி அழைப்பு:
1807 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத இவரது பெரியப்பா வில்ஹம் ஆண்ட்ரியா ரேனியசின் (Wilham A Rhenius) அழைப்பின் பேரில் மெமெல் ( Memel) என்ற இடத்திற்குச் செல்கிறார்.
இங்கு இருக்கும் போது மொரோவியன் இயக்கத்தின் வெளியீடுகளால் தூண்டப்பட்டு மிஷினரியாக செல்ல முடிவெடுக்கிறார்.
(மெமெல் இப்பொழுது Klaipeda என பெயர் மாற்றம் செய்யப்பட்டு லித்துவேனியாவில் உள்ளது).
இறையியல் கல்வி:
1811 ஆம் ஆண்டு ஜான் ஜெனிக்கே அவர்களால் துவங்கப்பட்ட இறையியல் கல்லூரியில் இணைந்தார். ஆகஸ்ட் 7, 1812இல் குருத்துவ அபிஷேகம் பெற்றார்.
(இந்த கல்லூரி இப்பொழுது மூடப்பட்டு விட்டது)
ஞாயிறு, 26 அக்டோபர், 2025
KAS- காசு- Cash Fano-Fanam- பணம்
டேனிஷ் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய பகுதிகளில் நடைமுறைப்படுத்திய நாணயம் KAS. 80 KAS ஒரு Fano. (Fanam in English).
8 Fano கொண்டது ஒரு ரூபாய்.
தரங்கம்பாடி கோட்டையை குறிக்கும் கோபுரத்தை கொண்ட 1/2 KAS சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது.
தமிழில் புழங்கும் காசு, பணம் எல்லாம் இதைச் சார்ந்ததே!
ஆங்கில சொல்லான Cash இதிலிருந்து வந்தது தான் என வாதிடுபவர்களும் உண்டு
ஞாயிறு, 7 செப்டம்பர், 2025
Three Hundred Years of Tranquebar: From Fort Chapel to TELC
வியாழன், 7 செப்டம்பர், 2023
கல்லறை எண் : 14 - காற்று வெளிதனிலே... இங்கொன்றும்...அங்கொன்றுமாக...
ஜான் அவர்களின் துயர்மிகு கடைசி நாட்களை எண்ணி உறக்கம் தொலைத்தவன் ஆனேன். ஏன் இந்த பாடுகள்? இந்த பாடுகளின் பயணத்தில் இந்த மனிதன் விட்டுச் சென்றது என்ன? போன்ற கேள்விகள் என்னை தரங்கபாடி கடலின் இரைச்சலின் இடையே அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து தேடுகிறேன்... காயத்திற்கு மருந்திடுவது போல சில பதிவுகள், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி, தென்படுகின்றன....
ஜெர்மனியில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர் ஜோஹன் ரெய்ன்ஹோல்ட் ஃபார்ஸ்டர் (Johann Reinhold Forster). இவர் ஒரு இறையியலாளர் மற்றும் அறிவியலாளர். கடிதத்தின் சாராம்சம் இது தான்- "விஷப் பாம்புகளின் கடிக்கு செலுத்தப்படும் விஷ முறிவு மருந்துகளின் மூலப்பொருட்களை கண்டு பிடிக்க இயலாதா? இந்த விஷ முறிவு எப்பொழுதும் பயனளிக்கிறதா?" இந்த கடிதம் அருட்திரு. ஜான் அவர்களுக்கு எழுதப்படுகிறது. இனி அவரின் பதில்- "மிஷனரி ஸ்வார்ட்ஸின் முந்தைய ஊழியர் 'சாமுவேல்' நாகப்பாம்பு (Brillen Schlange)மற்றும் வெறிநாய் கடிக்கான மருத்துவ செய்முறையை வைத்திருந்தார். ஸ்வார்ட்ஸ் முன்னிலையில், அவர் [சாமுவேல்] பலரைக் குணப்படுத்தி இருக்கிறார். அவரது சில குணப்படுத்தல்கள் கவனத்தை ஈர்த்து, அவருக்கு புகழ் சேர்த்தன. அரைப்பணம் விலையிலான மாத்திரைகளை அவரிடம் எல்லோரும் வாங்கினார்கள். அவை ஒரு பட்டாணியின் வடிவத்தில் , கருத்த நிறத்தில் இருந்தன. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார். அதன் மூலப்பொருட்களை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். மெட்ராஸ் அரசாங்கம் அவரை மெட்ராஸ் அனுப்பி வைத்து அந்த ரகசியத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிப்படுத்த வைக்கும் படியும் அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் ஷ்வார்ட்ஸுக்கு வேண்டுகோள் வைத்தது. அது நிறைவேறவும் செய்தது. நான் (ஜான்) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெட்றாஸில் இருந்து திரும்பும் போது அவரை சந்தித்தேன். அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு 200 நட்சத்திர- பக்கோடாக்கள் அவருக்கு கிடைத்தது. மெட்ராஸ் கூரியரிலும் இது வெளிவந்தது."
1792 இல் நடந்த இந்த கடித போக்குவரத்து அறிவியல் துறையில் எப்படிப்பட்ட நபர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார், எவ்வளவு ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அறிவியல் பணியை செய்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. மேலே சொல்லப்பட்டுள்ள "தாஞ்சாவூர் மாத்திரைகள் (Tanjore Pills) குறித்து பின் குறிப்பில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.
மகாராசன் வேதமாணிக்கம் திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் வேரூன்றியதில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவிய அவர் ஜான் அவர்களின் ஊழியம் குறித்து அறிந்து கொள்ள தரங்கம்பாடி சென்றதை ஒரு வலைப்பூ பதிவில் காணமுடிந்தது. . "பைபிளின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றிய சில அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு, வேதமாணிக்கம் தரங்கம்பாடி மிஷனுக்குச் சென்று தரங்கம்பாடி மிஷனின் தலைவரான டாக்டர் ஜானைப் பார்க்க விரும்பினார், அப்போது அவர் தரங்கம்பாடி அருகே பொறையாரில் வசித்து வந்தார். வேதமாணிக்கம் டாக்டர். ஜான் அவர்களை சந்தித்து தரங்கம்பாடி மிஷன் பிரஸ் பணி செய்யும் விதம், பெரிய தேவாலயம் , பள்ளிகள், அச்சக அலுவலகம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட தேவாலயம் சார்ந்த நிறுவனங்களின் செயல்பாட்டைக் கவனிக்கும் பாக்கியத்தை பெற்றார். . பின்னர் வேதமாணிக்கம் தஞ்சை திரும்பினார்."
2005 ஆம் ஆண்டு தானேயில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் விஜய் பெடேகர் என்பவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் மிக முக்கியமாக ஜான் உள்ளிட்ட மிஷினரிகள் டாக்டர் பட்டம் பெற்ற தகவல் குறிப்பிடத்தகுந்தது. "சி.எஸ். ஜான் மீனவர்களின் உதவியுடன் உள்ளூர் பிராந்தியத்தின் பல வகையான மீன்களைச் சேகரித்தார், தொழில்முறை இந்திய ஓவியர்களால் அவற்றை வரையச் செய்தார். சுமார் 50 இனங்களை ஜாடிகளில் பாதுகாத்து பெர்லினுக்கு பேராசிரியர் மார்கஸ் எலியேசர் ப்ளாச்சிற்கு (Professor Marcus Eliezer Bloch) அனுப்பினார். 1793 ஆம் ஆண்டில், ப்ளாச் மீன்களின் இயற்கை வரலாறு குறித்த தனது பன்னிரண்டு தொகுதிப் படைப்பை வெளியிட்டார். ப்ளாச் தனக்கு உதவிய மிஷனரிகளை கௌரவித்தார், "அந்தியாஸ் ஜானி" (Anthias Johnii) "அயோனியஸ் கருட்டா" (Iohnius Carutta) மற்றும் "அயோனியஸ் அனியஸ்" (Iohnius Aneus) என சில மீன் இனங்களுக்கு ஜான் உடைய பெயரிடப்பட்டது. "ஸ்கொம்பர் ரோட்லரி" (Scomber Rottleri) என்ற இனம் அவரது சக ஊழியர் ராட்லருக்கு அர்ப்பணிக்கப்பட்டது,"ஸ்காம்பர் க்ளீனி" (Scomber Kleinii) மிஷனரி மருத்துவர் க்ளீனுக்கு (Klein) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மீன்களின் பெயர்கள் லத்தீன் என்றாலும் இவை இந்திய மீன்கள் என்பது வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள்.""கிறிஸ்டியன் சாமுவேல் ஜான் (1747-1813) மற்றும் ஜோஹன் பீட்டர் ரோட்லர் (1749-1836) ஆகியோர் இந்திய மருத்துவ தாவரங்களில் அதிக ஆர்வம் காட்டினர். 1834-1841 வரை நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட “A Dictionary of the Tamil and English Language" " என்ற மாபெரும் படைப்பிற்காக அறியப்பட்ட ராட்லர், சுமார் 60 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். இவர் அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட செடிகளை சேகரித்து வைத்திருந்தார்.ஜான், க்ளீன் மற்றும் ராட்லர் ஆகிய மூவருக்கும் புகழ்பெற்ற German Leopoldina Academy of Researchers. எனும் அமைப்பு இயற்கை வரலாற்றில் அவர்களின் களப்பணிக்காக முனைவர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.க்ளீன் மருத்துவ மூலிகைகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பல மாதிரிகளை சேகரித்து ஜெர்மனிக்கு பல்வேறு அறிவியல் சங்கங்களுக்கு அனுப்பினார்".
அறிவியலைப் போலவே, என் பார்வையில், தமிழ் சமூக வரலாற்றிற்கும் அருட்திரு. ஜான் பெரிய பங்களிப்பை செய்துள்ளார். இன்னும் அறியப்படாத அந்த பக்கங்கள் புரட்டப்படும் போது அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம். தானியேல் பிள்ளை- இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். அன்றைய மொழியில் சொன்னால் துபாஷி. "தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் கவர்னர் பீட்டர் ஹெர்மன் அபெஸ்டியின் இந்திய துபாஷி தானியேல் பிள்ளை (Daniel Pulley 1740-1802) . இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது நீண்டகால நம்பிக்கையாளரும், நண்பருமான ஜானிடம் தனது வாழ்க்கையின் சூழ்நிலைகளை விவரிக்கிறார். ஜான் இந்த கதையை படியெடுத்து இது 'மிகவும் குறிப்பிடத்தக்க ' சுயசரிதைகளில் ஒன்றாகும் என்ற குறிப்புடன் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். தனது முழு கதையையும் சொல்லி முடிப்பதற்கு முன்பதாகவே தானியேல் பிள்ளை இறந்து விடுகிறார். இருப்பினும் C.S. ஜான் எழுதிய அவரது நினைவுகள், இந்து மத சூழலில் செதுக்கப்பட்ட, ஒரு மதம் மாறிய இந்திய கிறிஸ்தவன் தனது விசுவாசத்தையும், தார்மீக போதனைகளையும் கையாண்ட விதம் குறித்து, ஈர்க்கக்கூடிய சாட்சியாக அமைகிறது. ஒரு தமிழர் கிறிஸ்தவராக தானியேல் பிள்ளை ஒரு மிஷன் பள்ளியில் பயின்றார். சில காலம் மிஷனில் பணியாற்றினார். அவர் தரங்கம்பாடியில் டேனிஷ் ஆளுநரின் சேவையில் நியமிக்கப்பட்ட பிறகும், மதத்திலிருந்து அரசியல் துறைக்கு மாறிய பின்னரும், மிஷனுடன் தனது நல்ல தொடர்புகளைப் பேணினார். ஒரு தமிழனாக, கிறிஸ்தவனாக, உள்ளூர் நீதிமன்றத்தின் உறுப்பினராக, டேனிஷ் ஆளுநரின் ஆலோசகராக, தேவாலயக் காப்பாளராக, தென்னிந்தியாவின் சிறிய நகரமான தரங்கம்பாடி நகரின் வளமான குடிமகனாக தானியேல் பிள்ளை பல்வேறு அடையாளங்களை கொண்டவர். அவற்றில் சில ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. அவர் ஜானிடம் தனது கதையைச் சொல்லும் போது, தனது தனிப்பட்ட சண்டைகள், உள்மன போராட்டங்கள் மற்றும் சந்தேகங்களை எல்லா உண்மையோடும் வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதை தமிழில் விரிவாக விரைவில் வரும் என அவருக்குள் நம்புகிறேன்.
பின்குறிப்பு-1
வெறிநாய்கடி, பாம்புக்கடி மருந்து
டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை' என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைகாலுக்கு நன்கு பயன் தருகிறது என்று சென்னை மாநில கவர்னர் Sir Archibad Campbell, ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். சென்னை மாகாணத்தின் முதல் ஆங்கில வார இதழான மெட்ராஸ் கூரியரில் இச்செய்தி வெளியாகியுள்ளது. இநத மாத்திரைகளை வேலூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் William Duffin பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானதை, தன் கடிதம் மூலம் ராணுவ மருத்துவக் குழுவுக்குத் தெரிவித்திருக்கிறார். (ஆதாரம்: Dr. Duffin Minute to the Hospital Board 17.11.1788, பக்கம் 238-41) தஞ்சாவூர் மாத்திரை என்ற (Tanjore Pills) சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Current science vol.16, No. 12, 25.06.2014). ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ. 6,72,000. பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையைப் பரம்பரை வைத்தியர் விளக்கினார். இதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்குக் காரணமாகிவிட்டது
250 வருட காத்திருப்பு
தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் வந்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பைத் தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பாதிரியார் கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களைச் சென்றடையாமல் காத்திருக்கிறது.
(உலகம் அறியாத சித்த மருத்துவக் கொடைகள், இந்து தமிழ் திசை, 16 Apr, 2016 டாக்டர் ஜெ.ஸ்ரீராம்)
உதவிய பதிவுகள்
1. The arsenic and mercury-containing Tanjore pills used in treating Snake bites in the 18th century Madras Presidency, Ramya Raman, Anantanarayanan Raman and P. Ram Manoha
2. வலைப்பூ- Milestones of Kanyakumari
3. Dr. Vijay Bedekar's Speech- Seminar on Indian Contribution to World Civilization , 24th December 2005
புதன், 6 செப்டம்பர், 2023
கல்லறை எண் -14, மரணத்தை யாசித்த போராளி
கடந்த அத்தியாயத்தில் ஜான் பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணங்கள் மீது இருளின் நிழல் மெல்ல படியத் துவங்கியது. மெச்ச தகுந்த விதத்தில் பள்ளிகளுக்காக ஜான் பெரிய முயற்சிகள் எடுத்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தனக்காக அவர் குறித்துக் கொண்ட பாதையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நடந்தார். ஆனால் மறுபுறம் ராட்லரை தவிர மற்ற சக ஊழியர்களால் அவரது திட்டங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக ஐரோப்பிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது முள்ளாக அவர்கள் கண்களை உறுத்தியது. அது ஒரு நல்ல காரியமாக இருப்பினும், ஓசையின்றி ஜானையும் அவர் சார்ந்தவர்களின் கவனத்தையும் திசை திருப்பி, .ஊழியத்திற்கு உலை வைக்கும் என எண்ணினர்.
ஜான் மீது முதன் முதலில் புகார் அளித்தவர் மிஷனரி ஹேகலண்ட்' டென்மார்க்கை சேர்ந்த இவர் கோபன்ஹேகனில் இறையியல் கற்று 1785 இல் தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடி மிஷனின் அறிக்கைகளை ஹலே கல்லூரிக்கு அனுப்பும் பணியை ஜான் தான் செய்து வந்தார். இப்பொழுது ஹேகலண்ட்' எழுதுகிறார் " இங்குள்ள மிஷன் பணியில் நானும் பங்கு பெறுவதற்கான தருணம் வருகிறதாக நம்புகிறேன். இப்போது வரை ஜானின் செயல்பாடுகளையும், எல்லாவற்றையும் தானே முன்னிற்று செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையையும் ஒரு மௌனப் பார்வையாளனாக பார்த்து வருகிறேன். இனி கல்லூரியுடனான கடிதப் பரிமாற்றத்தில் நான் பங்கு கொள்வது எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது." இதற்காக கல்லூரியில் இருந்து கடுமையான கண்டனத்தைப் பெற்ற ஹேகலண்ட் அதற்கு அடுத்த ஆண்டே இறந்து போனார்.
ஹேகலண்ட் போலவே உடன் பணியாளரான கோனிக் ஜான் உடன் கருத்து வேறுபாடு கொள்கிறார். 17 மற்றும் 15 வயதுடைய ஜான்சன், லெபெக் எனும் இரு மாணவர்கள் மீது பெரு நம்பிக்கை வைக்கிறார், ஜான் . அவர்கள் மிஷினரிகளாக மாறுவார்கள். கல்வி நிலையங்களுக்கு தலைமை ஏற்பார்கள் என எதிர்பார்க்கிறார். தனது தீமோத்தியுக்களாக எண்ணி உயர் கல்விக்கு ஐரோப்பா அனுப்புகிறார். ஆனால், அவர்கள் மிஷனில் இருந்து விலகி செல்கின்றனர். "அவர்களின் முக்கிய ஆதாரமாக இருந்த என்னைப்போல் இதில் துயரம் அடைந்தவர்கள் யாரும் இருக்க இயலாது" என எழுதுகிறார் ஜான்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் ஜானுக்கும், ஊழியத்திற்கும் இருந்த மிகப் பெரிய எதிரி "காலத்தின் ஆவி" (Spirit of the Time). புறஜாதிகளுக்கு மத்தியில் ஊழியம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அபத்தமான யோசனையாக மேற்கத்திய உலகில் தோன்றத் துவங்கியது. அது உலகளாவிய ஏளனத்திற்கு ஆளானது. திருச்சபைகளின் இந்த உலகளாவிய சிதைவு, பொருத்தமான, ஆர்வமானவர்களை தரங்கம்பாடிக்கு மிஷினரிகளாக அனுப்பும் பணியை சிரமத்திற்கு உள்ளாகியது.
ஒரு மிஷினரி இறந்து போகிறார். அவர் இடத்தை நிரப்ப சரியான நபர்கள் கிடைக்காததால் புதிய மிஷனரி அனுப்படுவதில்லை. அது பணித்தளத்தில் எஞ்சி நின்ற மிஷினரிகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. "ஜெர்மானிய திருச்சபைகளின் நிலைமை துயரம் தருவது. பவுலுக்கும் , பிற அப்போஸ்தலர்களும் தெரியாத புதிய சுவிஷேசத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற தியாகத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையான செயல்பாடுகளையும் புறந்தள்ளுகின்றனர். இரட்சிப்பிற்கும், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமான அவரது ஒப்புரவாக்குதலின் ரத்தம் இகழப்பட்டு, கிறிஸ்து ஒரு நல்ல போதகராக மட்டுமே பார்க்கப்படுகிறார். " என தன் கருத்தை பதிவிடுகிறார் ஷ்வார்ட்ஸ்.
இதை தவிர்த்து, தரங்கம்பாடி அரசுக்கும், மிஷினரிகளுக்கும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் சென்று தங்கள் தரப்பு நியாத்திற்காக வாதாட வேண்டும் என்று ஜான் எண்ணுமளவுற்கு இந்த பனிப்போர் தீவிரமாக இருந்தது. இதற்காக மெட்ராஸ் வரை சென்றவர் , கப்பல் எதுவும் இல்லாததால் மீண்டும் தரங்கம்பாடி திரும்பினார்.
புதிதாக அனுப்பப்பட்ட மிஷினரிகளில் ஒருவரான ஃப்ருச்டெனிச்ட் (Fruchtenicht) குடி நோயாளியாக மாறி பெரிய தலைவலி ஆகிறார். இந்த சம்பவத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜான் எழுதுகிறார்., "ஒரு புதிய நேர்மையான மிஷினரி எங்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கக் கூடும். அப்படி பொருத்தமான மனிதர்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களை இப்படியே இறந்து போக அனுமதிப்பதே சிறந்தது."
இன்னொரு மிஷினரி இப்படி பதிவிடுகிறார். " ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெருகிவரும் கடவுள் மறுப்பு ஒரு காட்டாற்று வெள்ளம் போல தன் முன் உள்ள எல்லாவற்றையும் அடித்துச் சென்று விடுவது போல் பயமுறுத்துகிறது. அதை எங்களாலும் எதிர்கொள்ள இயலவில்லை. இந்த தேசத்தில் நீதிநெறிகள் சிதைவதை பார்க்கும் பொழுது, பிரசங்கங்கள், ஜெபங்கள், எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டியும் எங்கள் சபைகளில் அனுதினமும் அதிகமாக இந்த தாழ்ச்சியை காண நேரிடும் போது, ஜெபத்தில் கடவுளுக்கு முன்பாக மட்டுமே வைக்கக்கூடிய இந்த பன்முக பிரச்சனைகளின் கீழ் நாம் மூழ்க வேண்டி வரும் என்று உணர்கிறோம். இந்த மிஷன் தன முடிவை நெருங்குகிறது என நாங்கள் எண்ணுவதற்கு பல காரணங்களை நாங்கள் முன் வைக்க முடியும்". இப்படியான துயர சூழலில் தான் தரங்கம்பாடி மிஷன் தனது முதலாம் நூற்றாண்டை கொண்டாடியது.
பிப்ரவரி 13, 1808 அன்று ஆங்கிலேயர்களால் தரங்கம்பாடி கைப்பற்றப்பட்டதுபோர் உக்கிரமாக நடந்த ஆண்டுகளில்டென்மார்க் மற்றும் டென்மார்க் காலனிகள். இடையேயான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதராசில் இருந்த ஆங்கிலேய அரசு தரங்கம்பாடி மிஷனுக்கு சில ஆதரவை வழங்கியது. இந்த தேவை மிகுந்த நாட்களில் மிஷனுக்கு உதவியவர்களில் முக்கியமானவர் ஷவார்ட்ஸின் நண்பரான தஞ்சாவூர் மன்னர்.
ஜானுக்கு இப்பொழுது வயதாகி விட்டது. நோய்களும், துயரங்களும் அவரை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பாக அவரது மகனின் கெட்ட நடத்தை அவரை மனமடிவிற்கு உள்ளாகியது. இந்த பலவீனங்களின் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டே இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவரது பள்ளிகள் அவரின் கண்ணின் மணிகள் போல இருந்தன. அவர் கண்கள் பலவீனப்பட்டுக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் அவர் முழுவதும் பார்வையற்றவர் ஆனார். சில நேரங்களில் அவர் சபையில் பிரசங்கிற்பதற்காக கைபிடித்து பீடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் தனது விடுதலைக்காக ஏங்கினார். தனது மரணம் குறித்து தினம் தோறும் பேசினார். தனது துயரங்களை நீட்டிக்க வேண்டாம் என இறைவனிடம் மன்றாடினார். அவர் ஜெபம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 1, 1813.அன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார்.
பின் குறிப்பு
ஹேகலண்ட் நோயுற்று இருந்த காலங்களில் மிஷினரி ஜெனிக்கெ தரங்கம்பாடியில் இருந்தார். அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தார். அவரது மரண தருவாயிலும், அடக்க ஆராதனையில் உடன் இருந்ததாக ஜெனிக்கே தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார்.



