திங்கள், 26 செப்டம்பர், 2022

கல்லறை எண் 14- முன்குறிப்பு


ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது தான் முதன் முதல் இந்த பெயர் எனக்கு அறிமுகமாகியது. 1814, ஜூலை 4ஆம் தேதி ரேனியஸ் மற்றும் ஸ்னார் (Revd John Christian Schnarre) சென்னை வந்து சேருகின்றனர். அப்பொழுது ஒரு குறிப்பு காணக் கிடைக்கிறது. "தரங்கம்பாடியில் இருந்த அருள்திரு. டாக்டர். ஜாண் இறந்து போனார் என்கிற செய்தியே மிஷனரிகளுக்கு முதலில் கிடைத்தது. இவரது வழிகாட்டுதலின் கீழ் மிஷனரிகள் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க பட்டிருந்தது".  இந்த குறிப்பை மொழியாக்கம் செய்த பின்  அருள்திரு.டாக்டர். ஜாண் என்கிற பெயர் என் மனதில் எங்கேயோ பதிவாகிப் போனது. 

ரேனியஸ் ஐயர் உடன்  ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட உடன் ஊழியர் ஸ்னார். இருவரும் ஒன்றாகவே இங்கிலாந்து வந்து, அங்கிருந்து மெட்றாஸிற்கு பயணிக்கின்றனர். ரேனியஸ் திருநெல்வேலி வந்த சில நாட்களுக்கு பின் ஸ்னார் குறித்த செய்திகள் அவரது நாட்குறிப்பில் இல்லை. ஆனால், அவர் துவங்கிய பெண்கள் செமினரியை நடத்தியவர்களில் ஒருவராக திரு.ஸ்னாரின் விதவை மனைவி என்கிற குறிப்பு வருகிறது. இந்த குறிப்பை வாசித்த பின்   ஸ்னார் இறந்து போனார் என்பதை அனுமானிக்க முடிந்தது. இருப்பினும், அவர் எங்கு, எப்பொழுது, எப்படி இறந்தார் என்கிற கேள்விகளோடு அலையும் போது,  ஸ்னார், தரங்கம்பாடிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் என்பதும் அங்கேயே இறந்து, அடக்கம் பண்ணப்பட்டார் என்பதையும் அறிய முடிந்தது. 




அருட்திரு.ஸ்னார் அவர்களின் கல்லறையை தேடி  தரங்கம்பாடி பயணித்தேன். அங்கிருந்த புதிய எருசலேம் சபை வளாகத்தில், சில நிமிடங்களிலேயே கல்லறை கண்ணில் பட்டது. அந்த சிறு வளாகத்தை சுற்றி வருகையில் கண்ணில் பட்ட மற்றொரு கல்லறை C.S.John 1813 & 4 Children என்கிற பெயர் தாங்கிய கல்லறை. 



இந்த C.S.John தான் நான் முதல் பத்தியில் குறிப்பிட்ட அருள்திரு. டாக்டர். ஜாண், என்பது மின்னல் வெட்டு  போல பளிச்சிட்டது. ஆனால், ஏன் நான்கு குழந்தைகளும் அவரும் ஒரே கல்லறையில் புதைக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியோடு தரங்கம்பாடியை  சுற்றி அலையும் போது Karin Kryger மற்றும் Lisbeth Gasparski  எழுதிய Tranquebar Cemetries and Grave-monuments எனும் புத்தகம் கண்ணில் பட அதன் ஒளிப்பட பிரதியை வாங்கினேன். அந்த புத்தகத்தில் புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகளின் வரைபடம் ஒன்று நேர்த்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த, வரைபடத்தில், அருள்திரு. டாக்டர். ஜாண் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் Christoph Samuel John அவர்களின் கல்லறை எண்.14.



இந்த கல்லறை எண் 14 குறித்த பின்னோக்கிய பயணமே இனி வரும் பகுதிகள். 

3 கருத்துகள்:

  1. நானும் இந்தக் கள்ளரையைக் கானவெண்டுமென்ற ஆவலைக் கொண்டிருந்தேன். இப்போது நான் சென்றால் கல்லரைகளைக் குறித்த விவரங்களுடன் காண முடியும். அபூர்வமான தகவல்கள் சில நூற்றாண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. சகோதரர் ஜெபா அவர்களின் முயற்ச்சி மிகவும் பாராட்டப்படத்தக்கது.

    பதிலளிநீக்கு