புதன், 28 செப்டம்பர், 2022

கல்லறை எண் 14- அறிவியல் வளர்த்த தரங்கம்பாடி சங்கம்

கல்விப்பணி, இறைப்பணி இவற்றோடு கூட இயற்கை அறிவியல் மீது திரு. ஜான் அவர்களுக்கு தீராத தாகம் இருந்தது. 

15 அக்டோபர் 1788 இல் கல்கத்தாவில் இருந்த British Asiatic Society  போலவே தரங்கபாடியில் THE TRANQUEBARIAN SOCIETY (in Danish Det Tranquebarske Selskab)  உருவாக்கப்பட்டது. 1789 இல் இதில் 33 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். போர், நிதி பற்றாக்குறை, மரணங்கள் என பல்வேறு காரணங்களால் இந்த அமைப்பு அருட்திரு. ஜான் மரணமடைந்த 1813 இல் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 

இந்த அமைப்பில்  DHM   என்று அழைக்கப்பட்ட  Danish-Halle Mission  மிஷினரிகளோடு கூட  அரசு அதிகாரிகளும், தனிப்பட்ட வியாபாரிகளும் இடம் பெற்று இருந்தனர்.   இந்த குழு  உலகளாவிய அறிஞர்களின் வலைப்பின்னல் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது . அந்த வலைப்பின்னலில் இருந்த முக்கியமான சிலர்: 

Christoph Samuel John (1747-1813)

Johann Peter Rottler (1749-1836)

August Friedrich Cämmerer (1767-1837)

Johann Gottfried Klein (1766–1818)

 Patrick Russell (1726-1805)

James Anderson (1738-1809) 

 WilliamRoxburgh (1751-1815)

Benjamin Heyne or Heine (1770-1819)

இவர்கள் தாங்கள் கண்ட இயற்கை வரலாற்று மாதிரிகளை லண்டன், கோபன்ஹேகன், பெர்லின், ரோஜென்ஸ்பேர்க், லுண்ட் ஆகிய நகரங்களில் இருந்த அறிவியலாளர்களோடும், அறிவியல் அமைப்புகளோடும் பகிர்ந்து வந்தனர்.  டச்சு மலபார் கடற்கரை மற்றும் டச்சு சிலோன் ஆளுநராக இருந்த Johann Gerard van Angelbeek இவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இந்த அமைப்பிற்கு கிடைத்த மற்றொரு ஆதரவாளர் தஞ்சை மன்னர் சரபோஜி (2). 

இந்த காலகட்டத்தில் தரங்கம்பாடியில் நிறைய அறிவியல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தாவரவியல், விலங்கியல், பூச்சியில் மாதிரிகளும், அறிவியல் நூல்களும் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டன. ஒரு தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டது.

 இந்த தாவரவியல் பூங்கா மிஷினரி ஜானின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது. இந்திய தாவரங்களை ஐரோப்பிய அறிவு மற்றும் இந்திய அனுபவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் உணவு, உடை, சாயம், மருந்து, நறுமணம் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளை கண்டடைய முடியும், இதனால் சமூகம் பயன்படும்  என்பது அவர் வாதமாக இருந்தது. இந்த முன்மொழிவை அரசு ஏற்றுக் கொண்டு தரங்கம்பாடி நகரின் வடக்கே கடற்கரை ஓரமாக 32.5 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியது. இதன் பொறுப்பாளராக மிஷினரி ராட்லர் நியமிக்கப்பட்டார்.

   இந்த அறிவியல் வசதிகளை பார்வையிட நிறைய இந்திய, ஐரோப்பிய முக்கியஸ்தர்கள் தரங்கம்பாடி வந்தனர். தரங்கம்பாடி சுற்று சுவருக்கு வெளியே இருந்த இந்த மிஷன் தோட்டம் முக்கியமான உரையாடல்கள் நடக்கும் இடமாக அமைந்தது. இதில் தமிழ் பிராமணர்கள், இந்திய மருத்துவர்கள், மிஷினரிகள், மிஷன் மருத்துவர்கள் கலந்து அறிவியல் குறித்து கலந்துரையாடினர். மேலும், தென்னிந்தியாவில் இருந்த ஹலே மிஷன் தோட்டங்கள் பராமரிப்பாளர்கள் மத்தியில் ஒரு வலைப்பின்னல் உருவாகி தோட்டங்களில் விவசாயம் செய்வது குறித்த சமகால  செய்திகளை பரிமாறிக்கொண்டனர். 

மிஷினரிகளுக்கு இயற்கையை புரிந்து கொள்ளும் இந்த ஆர்வம் "இயற்கை இறையியல்" (Natural Theology or Physico-theology) என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது. அதிலும் மிஷினரி ஜான் இயற்கை புத்தகத்தை (The Book of Nature.) அறிவியல் பூர்வமாக  ஆராய்ந்து அறிந்து கொள்வது மூலம் இறைவனை அறிந்து கொள்வது எனும் கோட்பாட்டின் தீவிர ஆதரவாளராக இருந்தார். கோபன்ஹேகன் அரசும் இந்த முற்சிகளுக்கு ஒத்தாசையாக இருந்தது. உலகெங்கும் பரவிக்கிடந்த டேனிஷ் பேரரசில் எட்டு வானியல் கண்காணிப்பு கூடங்களை அமைக்கும் பணியில் டென்மார்க் ஈடுபட்டது. அதில் ஒரு கூடம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டு 1795 இல் ஒரு அரசாங்க வானியலாளரும் பணியமர்த்தப்பட்டார்.

 மிஷினரி ஜான்  சேகரித்த மாதிரிகளை உடனுக்குடன் சமகாலத்தைய ஆய்வாளர்களான ஜார்ஜ் ஃபாஸ்டர், மார்கஸ் ஃப்ளோஜ் (Marcus Élieser Bloch) வில்லியம் ரோஸ்பர்க் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜான் வரைந்த ஓவியங்களும், ஆய்வுக்குறிப்புகளும் மார்கஸ்   எழுதிய மீன்களின் வரலாற்று நூலுக்கு அடிப்படையாக அமைந்தன.


 ஆய்வாளர் மார்கஸ் ஒரு மீன் பேரினத்திற்கு ஜானியஸ் (Johnius)  எனும் பெயர் சூட்டினார்.Lutjanus johnii எனபதும் இவர் கண்டறிந்த  மீன் வகையாகும்.

 


 இந்தியாவின் முதல் பாம்பு மனிதர் எனும் புகழைப் பெற்ற நீர் நில ஊர்வன விலங்குகள் ஆய்வுத்துறையின் முன்னோடி பேட்ரிக் ரஸ்ஸல் மண்ணுள்ளிப் பாம்புகளுக்கு எரிக்ஸ் ஜான்னி Eryx johnii   என பெயர் சூட்டி கெளரவித்தார்.



 இவர் சேகரித்த மூலிகை செடி ஒன்றிற்கு Impatiens johni என்று பெயரிடப்பட்டது.



அறிவியல் துறைக்கு அருட்திரு. ஜான்  ஆற்றிய சேவைக்கு மரியாதையாக ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.  

பின் குறிப்பு-1

Johan Peter Rottler

பிரான்ஸ் தேசத்தை சார்ந்த மிஷினரி மற்றும் தாவரவியலாளர். டேனிஷ் மிஷனில் ஆரம்பத்தில் தரங்கம்பாடியிலும் பின் சென்னை வேப்பேரியிலும் பணியாற்றியவர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான தாவர மாதிரிகளை தென் இந்திய பகுதிகளில் சேகரித்து ஐரோப்பாவிற்கு ஆய்வுக்கு அனுப்பியவர்  .

பின் குறிப்பு-2

August Friedrich Cämmerer

திருக்குறளை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்த டேனிஷ் மிஷினரி. 1803 ஆம் ஆண்டு முதல் இரண்டு புத்தகங்கள் வெளியாகின. தரங்கம்பாடி மிஷனின் கடைசி மிஷனரியாக 1837 இல் மரணமடைந்தார். 

பின் குறிப்பு-3

Johann Gottfried Klein

J G Klein என்று அறியப்பட்ட தாவரவியலாளர். 

பின் குறிப்பு-4

Patrick Russell 

ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் . இயற்கை ஆர்வலர். இந்திய பாம்பு வகைகளை ஆய்வு செய்தவர். "இந்திய பாம்பு ஆய்வியலின் தந்தை" ( "Father of Indian Ophiology")  என அழைக்கப்படுபவர்.

பின் குறிப்பு-5

James Anderson 

ஸ்காட்லாந்தை சேர்ந்த மருத்துவர்  மற்றும் தாவரவியலாளர்.  கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றியவர்.சென்னை மாம்பலத்தில் ஒரு தாவரவியல் பூங்காவை நிறுவியவர்.

பின் குறிப்பு-6

William Roxburgh

ஸ்காட்லாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தாவரவியலாளர். கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றியவர். இந்திய தாவரவியல் துறையை நிறுவியர்  (Founding father of Indian botany) எனும் பேர் பெற்றவர். 

பின் குறிப்பு-7

Benjamin Heyne

ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர், இயற்க்கை ஆர்வலர், தாவரவியலாளர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர். இவர் சேகரித்து அனுப்பிய நிறைய தென்னிந்திய தாவரங்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகளால் இவர் பெயராலேயே வழங்கப்பட்டன. 

பின் குறிப்பு-8

டேனிஷ் அரசால் பணியமர்த்தப்பட்ட வானியலாளர் பெயர் Henning Munch Engelhart . இவர் தரங்கம்பாடி சீயோன் ஆலய ராணுவ குருவாகவும் பணியாற்றினார். இந்த வானியல் கூடம் சீயோன் ஆலய கோபுரத்தில் நிறுவப்பட்டது. 

பின் குறிப்பு-9

மிஷினரி ஜானுக்கு முனைவர் பட்டம் கொடுத்த ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அமைப்பின் ஆங்கில பெயர் மற்றும் தேதி  நம் தேடுதலில் உள்ளது. 

பின் குறிப்பு-10

இந்திய மருத்துவம், தாவரவியல், உயிரியல், வரலாறு, வானியல்,வேதியல் ,  அகராதி  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு குறித்த தனி புத்தகம் திட்டமிட்டுள்ளேன். அந்த தருணத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் குறித்து விரிவாக பதிவிடுவேன். 

உதவிய பதிவுகள் 

1. The Medical Skills of the Malabar Doctors in Tranquebar, India, as Recorded by Surgeon T L F Folly, 1798

2. THE TRANQUEBARIAN SOCIETY’ Science, Enlightenment and Useful Knowledge in the Danish-Norwegian East Indies,c. 1768-1813. 

1 கருத்து:

  1. முற்றிலும் நான் இதுவரை அறிந்திராத தகவல்கள். நன்றி சகோதரர் ஜெபா.

    பதிலளிநீக்கு