வெள்ளி, 26 டிசம்பர், 2025

மௌனத்தின் ஒளி - என்னுரை

 


ஜோசப் டேனியல் ஜெனிக்கே (1759–1800)

(தமிழில் மிஷனரி வரலாறுகளை மீட்டெடுக்கும் ஒரு எளிய முயற்சி)

தமிழ் கிறிஸ்தவ வரலாறு, நீண்ட காலமாகத் தமிழில் முழுமையாக ஆவணப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பெரும் பகுதி இன்னமும்  மொழிபெயர்க்கப்படாத நினைவடுக்குகளாக, சிலரின் மனங்களிலும், சில நூலகங்களிலும்,  ஆவணக் காப்பகங்களிலும் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

18–19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பணியாற்றிய ஆயிரங்களைத் தாண்டும் மிஷனரிகள், அவர்களுடன் தோள் கொடுத்து உழைத்த உள்ளூர் ஊழியர்கள், அவர்கள் சந்தித்த ஆன்மீகப் போராட்டங்கள், அரசியல் சவால்கள், தனிமனிதத் தியாகங்கள்—இவை அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே உறைந்து போயுள்ளன; தமிழில் அல்ல.

ஒரு ஆய்வாளனாகவும், ஆர்வலனாகவும் இந்த வரலாற்றைத் தேடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒரு நூலுக்காக ஊர் ஊராக அலைந்து, பல நாட்கள் காத்திருந்து, பக்கங்களை நகலெடுக்க வேண்டியிருந்தது. இன்றோ, அந்த நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில், கணினித் திரையில் கண்முன் குவிந்து கிடக்கின்றன. ஆனால், 'மொழி ' இன்னும் ஒரு பெரும் சவாலாகவே  இருந்து வருகிறது . இந்த நூல், அந்தத் தடையை  அகற்ற முயலும்  ஒரு சிறிய முயற்சி.

நமது மிஷன் வரலாறு பெரும்பாலும் 'பெரிய பெயர்களின்' வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது. சீகன்பால்க், சுவார்ட்ஸ், கால்டுவெல், போப்—இந்த ஒளிரும் பெயர்களின் வெளிச்சத்தில்தான் நமது வரலாறு வாசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பெரும் வெளிச்சத்தின் நிழல்களில், பலர் அமைதியாக உழைத்து மறைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர்—ஜோசப் டேனியல் ஜெனிக்கே.

இது பெரிதும் அறியப்பட்ட பெயரோ, பரவலாகப் பேசப்பட்ட சரித்திரமோ அல்ல. ஜெனிக்கே ஒரு காலத்தைப் புரட்டிப் போட்டவரும் அல்ல; ஆனால், அவர் ஒரு பாலம்.

சுவார்ட்ஸ் போன்ற மாபெரும் மிஷனரி மரபுக்கும், முளைவிட்டு வளர்ந்த உள்ளூர் சபையின் முதிர்ச்சிக்கும் இடையிலான ஒரு உறுதியான, அமைதியான பாலம். தமிழக மிஷன் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தைச் சத்தமில்லாமல் கட்டமைத்தவர்.

இந்த நூலில், அவரை நாம் மிகைப்படுத்திக் கொண்டாடவில்லை; அதே நேரத்தில், ஒரு பக்கக் குறிப்பாகப் புறந்தள்ளவுமில்லை. அவருடைய சாட்சி நிறைந்த வாழ்வை ஊடுருவிப் பார்க்க முயன்றிருக்கிறோம்.

ஒரு மனிதன்— 

எப்படி அழைப்பில் வளர்கிறான்? 

எப்படிப் பொறுப்பை ஏற்கிறான்? 

எப்படித் தன் அதிகாரத்தைப் பிறருடன் பகிர்கிறான்? இறுதியாக, தன்னைத் தாண்டி அந்தப் பணியை எப்படி விட்டுச் செல்கிறான்? —என்பதையே இந்த நூல் மெல்லிய குரலில் உங்கள் முன் வைக்கிறது.

இது போதகர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் மட்டுமே எழுதப்பட்டதல்ல; இது, தன் வேர்களைத் தேடும் ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனுக்குமானது.

வாருங்கள்... மௌனத்தில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் குரல்களில் இருந்து ஒரு குரலை மீட்டெடுப்போம். இருள் கவிழ்ந்து கிடக்கும் வரலாற்றின் பெரும் பாதையில், ஒரு சிறு மெழுகுத் திரியை ஏற்றி வைப்போம்.

அன்புடன், 

ஜெபக்குமார்

கிறிஸ்து பிறப்பு திருநாள், 2025 

துபாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக