ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பெயர்களுக்கு பின்னால் -1 , ஜார்ஜ் டவுன் - George Town

 1639இல் புனித ஜார்ஜ் கோட்டை உருவான பின், இந்திய நெசவாளர்களும், வியாபாரிகளும் கோட்டைக்கு அருகில் குடியேற துவங்கினர். இந்த குடியேற்ற பகுதி கறுப்பர் நகரம் (Black Town) என அழைக்கப்பட்டது. குத்து மதிப்பாக இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றம்  இருக்கும்  பகுதியில் இந்த கறுப்பர் நகரம் இருந்துள்ளது. 

Wheeler Tollboy's map of Madars in 1733

பிரெஞ்சியர்கள் 1746 இல் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் கோட்டை பிரெஞ்சியர் வசம் இருந்தது. 1749 இல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. இந்த காலகட்டத்தில் கறுப்பர் நகரம் அழிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் அதே இடத்தில கறுப்பர் நகரம் மீண்டும் அமைய கிழக்கிந்திய கம்பெனி விரும்பவில்லை. எஸ்பிளனேட் பகுதிக்கு வடக்கே இருந்த திறந்தவெளியில் புதிய கறுப்பர் நகரம் உருவானது. முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை பகுதிகள் இந்த புதிய கறுப்பர் நகராக ஆரம்பத்தில் அறியப்பட்ட போதும், நகரம் வளர, வளர இதன் எல்லைகளும் மாறிக்கொண்டே இருந்தது. இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட நிறவெறி பெரும் காரணமாக கருதப்பட்டாலும் வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. காரணம் என்னவாக இருந்தாலும் இந்த வெறுப்பூட்டும்  பெயர் 20 ஆம் நூற்றாண்டு   வரை நீடித்தது. 


                                                                Faden's Map of Madras 1814


1906 ஜனவரியில், வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் ஆல்பர்டின் வருகையை ஒட்டி இந்த பகுதியை  பெயர் மாற்றம் செய்ய பரிசீலிப்பதாக மெட்ராஸ் அரசு அறிவித்தது. பல்வேறு விவாதங்களுக்குப் பின், புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருப்பதாலும், ஜார்ஜ் இளவரசரின் வருகையை ஒட்டியும் இந்த பகுதிக்கு "ஜார்ஜ் டவுன்" என பெயரிடுவது சரியாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 24 முதல் 28 வரையிலான தனது பயணத்தை முடித்து இளவரசர் புறப்படும் நேரத்தில் அவர் ஒப்புதல் பெற்ற பின் ஒரு சிறப்பு கெசட் மூலம் மெட்றாஸ் அரசு இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தது.


                                 Photograph of Black Town in Madras, taken by Frederick Fiebig in c.1851.



உதவிய பதிவு 
The Madras Black Town- Origins and Name Change- Vikram Raghavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக